சென்னை விமான நிலையத்தில் துர்நாற்றம்: ப. சிதம்பரம் கேள்வி; நிர்வாகம் அளித்த விளக்கம்!
chennai airport pa chidambaram congress
சென்னை விமான நிலையத்தின் துர்நாற்றம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியதுடன், விமான நிலைய நிர்வாகம் அளித்த விளக்கத்தையும் 'இது நல்லாயிருக்கே!' என்று விமர்சித்துள்ளார்.
சிதம்பரத்தின் கேள்வி:
இது தொடர்பாகத் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்ட ப. சிதம்பரம், "சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையத்தின் பிரதான வரவேற்பறையிலிருந்து வெளியேறி சாலைக்கு வரும்போது, சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றம் விமான நிலைய மேலாளருக்கோ அல்லது இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகளுக்கோ தெரியவில்லையா? இது எப்படி ஒரு சர்வதேச விமான நிலையமாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
விமான நிலைய நிர்வாகத்தின் பதில்:
ப. சிதம்பரத்தின் பதிவுக்குப் பதிலளித்த விமான நிலைய நிர்வாகம், அவருக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்திற்காக வருத்தம் தெரிவித்ததுடன், துர்நாற்றத்திற்கான காரணத்தையும் விளக்கியது:
"குப்பைகளை அகற்றும் லாரி, பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ள நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில்தான் இயக்கப்படுகிறது. அந்த லாரி, பத்து நிமிடங்களுக்கு முன்புதான் அந்தப் பகுதியைக் கடந்து சென்றது. அதனால் துர்நாற்றம் வீசியிருக்கலாம். எங்களுடைய 24 மணி நேர பணி மேலாளர்கள் அந்தப் பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பை உறுதி செய்து வருகிறார்கள்."
நிர்வாகத்தின் இந்த விளக்கத்தை ப. சிதம்பரம் கிண்டலுடன் குறிப்பிட்டிருப்பது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
chennai airport pa chidambaram congress