அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து - பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன்.!
BJP MLA nayinar Nagenthiran speech about Annamalai alliance decision
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தனியாக போட்டியிட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு ஏராளமான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கட்சியின் மையக் குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் இங்கு பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பாளையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. பாஜகவை பொறுத்தவரை கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்யும். அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்வோம். தமிழ்நாட்டில் யாரும் தனித்து போட்டியிட முடியாது. அவர் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது என்பது மிகவும் சிரமம். அதனால், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தான் ஆக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP MLA nayinar Nagenthiran speech about Annamalai alliance decision