#BREAKING : கூட்டணி குறித்து பேச எனக்கு எந்த அதிகாரமும் இல்லை - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!
BJP Annamalai explain about ADMK alliance decision
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக தனியாக போட்டியிட்டால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு ஏராளமான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கட்சியின் மையக் குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் இங்கு பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் முடிவுக்கு பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி குறித்த தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி பேசிய அவர், என்னுடைய கருத்து குறித்து பாஜக தேசிய தலைவர்களிடம் பேசி வருகிறேன். தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வேண்டும். அதேபோல் அரசியல் களத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

பணம் இல்லாத அரசியல்தான் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக மாநில தலைவராக இருந்து அனுபவத்தில் நான் பேசுகிறேன். இனி வரும் காலங்களில் இன்னும் தீவிரமாக பேச உள்ளேன்.
அதேபோல் கூட்டணி குறித்து பேச எனக்கு எந்த அதிகாரமும் இல்லை கூட்டணி குறித்து பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும். என்னுடைய கருத்தில் 50 சதவீதம் பேருக்கு உடன்பாடும், 50 சதவீதம் பேருக்கு எதிர் கருத்தும் உள்ளது. ஆனால் என்னுடைய நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai explain about ADMK alliance decision