புகையில்லா போகி பண்டிகை - தமிழக மக்களுக்கு அமைச்சர் விடுத்த வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


தமிழக மக்கள் அனைவரும் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுமாறு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நமது முன்னோர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். 

இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், இரசாயணம் கலந்த பொருட்கள் போன்றவை எரிக்கப்படுகின்றன. 

இம்மாதிரியான, நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல்கள் பாதிப்பு, கண், மூக்கு எரிச்சல் போன்ற நோய்கள் பொது மக்களுக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. 

மேலும் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்குறிப்பிட்ட நச்சு கலந்த பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. 

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டுகளில் போகிபண்டிகைக்கு முன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. 

இதன் காரணமாக பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது. 

இந்த ஆண்டு நச்சு கலந்த பொருட்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமையிடங்களிலும் வாரியத்தின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிரச்சார ஊர்திகள் மூலம் சென்னை மாநகரின் 15 மண்டலங்களிலும் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. 

தவிர, பண்பலை அலைவரிசை (FM Radio) மூலமும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பபடுகிறது. மேலும், போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், சென்னையின் 15 மண்டலங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. 

எனவே, பொது மக்களை நச்சு கலந்த பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் பழைய துணிகள் மற்றும் பயன்படத்தக்க பழைய பொருட்களை பிறருக்கு கொடுத்து உதவலாம் என்றும் தேவையற்ற பொருட்களை எரிக்காமல் சுற்றுச்சூழல் மாசுபடாத போகிப் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்." என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bhogi pongal 2022


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->