தவெகவுக்கு ஆதரவு கோரியதால் நடவடிக்கை; பாஜக செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் அதிரடி நீக்கம்..!
ANS Prasad Abruptly Removed from Post of BJP Spokesperson
தமிழக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், தவெக தலைவர் விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு ஏ.என்.எஸ்.பிரசாத் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரானது எனக் கருதப்பட்டது. அதனால் அப்போது அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் மீண்டும் கட்சிப் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.என்.எஸ்.பிரசாத் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும், குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என்று பாஜக தேசியத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த அறிக்கையை தொடர்ந்து, 'கட்சியின் மேலிட அனுமதி இன்றி, தன்னிச்சையாக இத்தகைய கருத்தை வெளியிட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என பாஜக தலைமை கருதிய நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக மீண்டும் கட்சியின் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார். அதாவது, "பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்," என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
ANS Prasad Abruptly Removed from Post of BJP Spokesperson