'செங்கோட்டையன் கட்சி கொடி, கரை வேட்டி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்': அதிமுக வழக்கறிஞர் அணி புகார்..!
AIADMK legal team complains that the use of the Sengottaiyan party flag and Dhoti should be banned
எடப்பாடி பழனிச்சாமி குடும்ப அரசியல் செய்கிறார் என முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இப்போது வருகின்ற பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும் போது, இன்று எடப்பாடி பழனிசாமி அரசியலில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையீடுகள் இருப்பது என்பது நாடறிந்த உண்மை என நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் 05-ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும், இந்த பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சி பதவிகளையும் எடப்பாடி பழனிச்சாமி பறித்தார்.

அத்துடன், கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 53 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் தனக்கு விளக்கம் கேட்டு எந்தவித நோட்டீசும் வழங்காமல் சர்வாதிகாரமாக எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கி இருப்பதாகவும், அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே உள்ளதாகவும், அவரை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுக கட்சி கொடி, கரை வேட்டியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று, அதிமுக வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளனர். அத்துடன், செங்கோட்டையன் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சி கொடி, சின்னம், தலைவர்கள் படங்களை பயன்படுத்த செங்கோட்டையனுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
AIADMK legal team complains that the use of the Sengottaiyan party flag and Dhoti should be banned