திடீர் திருப்பம் | பிளானை மாற்றிய எடப்பாடி பழனிசாமி - வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு!
AIADMK EPS VS OPS ASSEMBLY 2022
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். கட்சியின் தலைமை அலுவலகமும் எடப்பாடி பழனிச்சாமி வசமே இருக்கிறது.
அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஓ பன்னீர்செல்வத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்க கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டப்பேரவை தலைவரிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும், அதிமுகவின் எதிர்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஆர்பி உதயகுமாரை பரிந்துரை செய்தும் கடிதம் வழங்கப்பட்டது.
இந்த பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று, ஓபிஎஸ் தரப்பிலும் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான் என்பதால், சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று, சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார்.
இதனை தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில், அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தினை அதிமுக கொறடா, சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கியுள்ளார்.
இரண்டு தரப்பு போட்டி காரணமாக சபாநாயகர் அப்பாவு என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக இன்று காலை தகவல் வெளியாகியது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர் எதிர்கட்சித் துணை தலைவராக தொடர்வதை கண்டித்து, வரும் 17ம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தை அதிமுக முழு புறக்கணிப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், புதிய எதிர்கட்சித் துணை தலைவரை அதிமுக நியமித்த பின்னரும், சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டிக்கும் வகையிலும் போராட்டம் செய்ய உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
AIADMK EPS VS OPS ASSEMBLY 2022