நீதிமன்றத்தில் உயிரற்ற கருவை வைத்த தந்தை: மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் அரங்கேறிய அதிர்ச்சி!
madhya pradesh court dad shocking case
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கின் போது, மனுதாரர் ஒருவர் தனது மனைவியின் சிதைந்த உயிரற்ற கருவை நீதிபதிகள் முன் கொண்டு வந்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி:
மனுதாரர் ஒருவர், மாருதி சுசுகி நிறுவனத்தில் சுமார் 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு நடந்ததை தான் வெளிப்படுத்தியதால், கடந்த ஓராண்டாகத் தனது குடும்பம் குறிவைத்துத் தாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதன் ஒரு பகுதியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கார் விபத்தில் தனது மனைவியின் கரு சிதைந்ததாகவும், தனது மகள் தீ விபத்தில் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து குடியரசுத் தலைவர் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், மகளின் மருத்துவச் செலவிற்கு ரூ.82 லட்சம் இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடினார்.
நீதிமன்றத்தில் நடந்த கூத்து:
கடந்த மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, திடீரென ஒரு பெட்டியிலிருந்து தனது மனைவியின் சிதைந்த கருவை எடுத்து நீதிபதிகள் முன் அவர் வைத்தார். இதைக் கண்டு நீதிபதி ஹிமான்ஷு ஜோஷி தலைமையிலான அமர்வு அதிர்ச்சியில் உறைந்தது. ஒரு நீதிமன்ற அறையில் இத்தகைய செயல் மிகவும் ஆட்சேபனைக்குரியது என நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
எதிர் தரப்பான மாருதி சுசுகி மற்றும் அரசு தரப்பு வக்கீல்கள், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என வாதிட்டனர். மனுதாரரின் இழப்பிற்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்த நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மனுதாரரைக் கடுமையாகக் கண்டித்தது.
English Summary
madhya pradesh court dad shocking case