திமுகவோடு கூட்டணியா? சட்டப்பேரவையில் தவெக-விற்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி!
AIADMK Chief Whip Agri Krishnamurthy Refutes Claims of Coalition Talks with DMK in TN Assembly Slams Opposition
தமிழ்நாடு சட்டப்பேரவையில், அதிமுக திமுகவோடு இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் மறுப்புத் தெரிவித்துப் உரையாற்றினார். அதிமுக யாருடைய தயவிலும் இயங்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் பேரவையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பேரவையில் தொடர்ந்து பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் எஃகு கோட்டையாக மாற்றப்பட்ட இந்த இயக்கத்தை, அவ்விரு தலைவர்களின் மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி பாதுகாத்து வழிநடத்தி வருகிறார். நடப்புத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1.35 கோடி வாக்குகளுடன் 53 இடங்களைக் கைப்பற்றியுள்ளது; இதில் அதிமுக மட்டுமே தனித்து 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் எங்களை எதிர்க்கட்சியாகச் செயல்பட அனுமதித்துள்ள நிலையில், நாங்கள் திமுகவோடு என்றைக்கும் கூட்டணி அமைக்க விரும்பியதில்லை; இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியும் எங்கும் பேசவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும், திமுகவை 'தீய சக்தி' என்று எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அறிவித்த வழியிலேயே எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழிநடத்தி வருகிறார் எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யார் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கண்டித்தார். முன்னதாக, "தவெக குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை; திமுகவின் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார்டு ஹோட்டலில் திமுகதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டது" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூன் பேரவையில் பேசியிருந்த சூழலில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இந்த விளக்கம் சட்டமன்றத்தில் மேலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
English Summary
AIADMK Chief Whip Agri Krishnamurthy Refutes Claims of Coalition Talks with DMK in TN Assembly Slams Opposition