ஜாமீனில் வெளிவந்து மீண்டும் ரூ.7 கோடி நிதி மோசடி: முதலீட்டாளர்களை ஏமாற்றிய பங்கு வர்த்தகர் மீது மீண்டும் வழக்கு!
Maharashtra Stock Broker On Bail Booked for Fresh 7 Cr Ponzi Fraud Promising 1 Daily Return
மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவ்லி பகுதியில் பங்கு வர்த்தக நிறுவனம் தொடங்கி ரூ.7 கோடிக்கும் அதிகமாகப் பண மோசடியில் ஈடுபட்டதாக, ஏற்கனவே நிதி மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பிரசாந்த் அங்னே என்பவர் மீது காவல்துறையினர் மீண்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு பிரசாந்த் அங்னே மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் இணைந்து 'கன்கன்ஸ்மார்ட் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக் புரோக்கர் பிரைவேட் லிமிடெட்' என்ற முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கினர். அந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் தருவதாகக் கூறி 52 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2.77 கோடிக்கும் மேல் ஏமாற்றியதாகக் கடந்த காலத்தில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அவர்களுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிரசாந்த் மீண்டும் பொதுமக்களிடம் தாங்கள் முதலீடு செய்யும் பணத்திற்குத் தினமும் 1 சதவீதம் லாபம் தருவதாக ஆசைவார்த்தை கூறி புதிய மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்துத் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் புதிய மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய டோம்பிவ்லி உதவி காவல் ஆணையர் விஜய் மராத்தே, பிரசாந்த் மீது பாண்டுப், டோம்பிவ்லி மற்றும் தானே ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், "தற்போது வரை 67 முதலீட்டாளர்கள் தாங்கள் ரூ.7 கோடி வரை இழந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர்; பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மற்றும் இழப்பீட்டுத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Maharashtra Stock Broker On Bail Booked for Fresh 7 Cr Ponzi Fraud Promising 1 Daily Return