“இந்த சந்திப்பு என்றென்றும் நினைவில் இருக்கும்”!கமல்ஹாசனை நேரில் சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள்!
This meeting will be remembered forever South Indian Film Writers Association office bearers meet Kamal Haasan in person
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சேரன் தலைமையிலான ‘நம்ம கே.பாக்யராஜ்’ அணி வெற்றி பெற்று, சங்கத்தின் தலைவராக சேரன் பொறுப்பேற்றார். அவருடன் அந்த அணியைச் சேர்ந்த பலரும் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தலில் சேரன் தலைமையிலான ‘நம்ம கே.பாக்யராஜ்’ அணிக்கும், குகநாதன் தலைமையிலான ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் சேரன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் நடிகருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும், திரையுலகின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழும் திரு. கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், “சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும், திரு. கமல்ஹாசன் அவர்கள் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கமல்ஹாசனின் எழுத்து அனுபவங்களையும் வழிகாட்டுதலையும் கேட்டறிவதற்காக அவரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருந்ததாகவும், அதனை ஏற்றுக்கொண்டு கமல்ஹாசன் தங்களை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் உருவாக்கிய படங்களில் இடம்பெற்றுள்ள எழுத்து குறித்து பேசியுள்ள எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள், ‘மகாநதி’, ‘அன்பே சிவம்’, ‘ஹே ராம்’, ‘குணா’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது எழுத்து மிகவும் வலிமையாகவும் கூர்மையாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
“சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தை சொல்லும் வகையில் அவர் எழுதியிருப்பார். அந்த மாதிரியான எழுத்துகளை கொடுத்தவர் திரு. கமல்ஹாசன். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம்” என சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்கு நேரம் ஒதுக்கி சந்தித்த கமல்ஹாசன், சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், சங்கத்தை சிறப்பாக நடத்துமாறும் அறிவுறுத்தி அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.
“இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்” என்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது சங்கத் தலைவர் சேரனுடன் எழுத்தாளர்கள் சினேகன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
This meeting will be remembered forever South Indian Film Writers Association office bearers meet Kamal Haasan in person