டெல்லி விடுதி கட்டிட விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் ராஜஸ்தானில் கைது; 4 மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்!
Owner of Collapsed Delhi PG Hostel Arrested in Rajasthan MCD Suspends Officials as Death Toll Reaches 7
டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் 5 அடுக்குகள் கொண்ட தனியார் மாணவர்கள் தங்கும் விடுதி (PG) கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில், சம்பவ இடத்திலிருந்து தலைமறைவாகியிருந்த கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தாவை ராஜஸ்தான் மாநிலத்தில் வைத்து டெல்லி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் தீவிர முயற்சியால் இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு டெல்லியின் முக்கியக் கல்லூரிப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பழமையான கட்டிடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக முழு கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது. விபத்தைத் தொடர்ந்து கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா தலைமறைவானதால், அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் டெல்லி காவல்துறை 'லுக்-அவுட்' சுற்றறிக்கை வெளியிட்டதுடன், அவரது பாஸ்போர்ட் விவரங்களையும் கைப்பற்றித் தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது.
இதற்காக அமைக்கப்பட்ட 10 சிறப்புப் படைகள் நடத்திய தீவிரத் தேடுதலின் முடிவில், ராஜஸ்தான் மாநிலம் பிவாடி பகுதிக்கு அருகில் பதுங்கியிருந்த ஹரிராம் குப்தாவை டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட உரிமையாளரிடம் விபத்துக்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, இக்கடூர விபத்தைத் தொடர்ந்து கட்டடப் பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் தொடர் அலட்சியப் போக்கு தொடர்பாக டெல்லி மாநகராட்சி (MCD) கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய தென் மண்டலத் துணை ஆணையர், நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட பல மாநகராட்சி அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
English Summary
Owner of Collapsed Delhi PG Hostel Arrested in Rajasthan MCD Suspends Officials as Death Toll Reaches 7