திமுக எம்.பி ஆ.ராசாவின் உருவ பொம்மை எரிப்பு.!! கிருஷ்ணகிரியில் பெரும் பதற்றம்.!!
AIADMK cadres burn DMK Raja doll
பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் வீட்டில் பணிபுரிந்து வந்த பட்டியலின பெண்ணை கொடுமைப்படுத்தி தாக்கியதாக அவர் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் எம் எல் ஏ வின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவரும் தலைமறைவாகினர். தலைமறைவான இருவரையும் திமுக அரசு பாதுகாப்பதாக குற்றம் சாட்டிய அதிமுக தரப்பு குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் இருவரையும் தனிப்படை போலீசார் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர். தற்போது இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்றது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி முனுசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் உருவமையை எரித்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் வலுத்த நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்த அதிமுகவினர், அதனை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
English Summary
AIADMK cadres burn DMK Raja doll