முன்னாள் அமைச்சர்கள் வழக்கை ஏன் இவ்வளவு காலதாமதம் செய்யுறீங்க? தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் கணடனம்!
ADMK Minister scam case TN Police Chennai HC
சென்னை உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் மந்தமான விசாரணை குறித்து கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. “சாதாரண மக்களின் வழக்கை வந்தே பாரத் ரயில் வேகத்தில் விசாரிக்கிறார்கள்; ஆனால் முன்னாள் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் சம்பந்தமான வழக்குகளில் ஏன் இத்தனை மெதுவாக செயல்படுகிறார்கள்?” என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் பணிகளில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை, வேலுமணி மற்றும் பல ஐஏஎஸ் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விரைவாக முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
நீதிமன்றம் அதற்கு முன்பு 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், அது அமல்படுத்தப்படாததால், அறப்போர் இயக்கம் அவமதிப்பு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
அப்போது காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது: “ஐஏஎஸ் அதிகாரிகள் கே.எஸ். கந்தசாமி, விஜயகார்த்திகேயன், காந்திமதி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. இதில் காந்திமதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மற்ற இருவருக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை தமிழில் இருப்பதால், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்புமாறு மத்திய அரசு கூறியுள்ளது” என தெரிவித்தனர்.
இதற்கு நீதிபதி கடுமையாகப் பதிலளித்து, “இது முன்னாள் அமைச்சருக்கு எதிரான முக்கிய ஊழல் வழக்கு. இதை இழுத்தடிப்பது ஏற்கக்கூடியது அல்ல. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், குற்றமற்றவர் என அவர் கூறும் வாய்ப்பு கிடைக்கும்” என எச்சரித்தார்.
அதன்பின், வழக்கு நவம்பர் 10 வரை ஒத்திவைக்கப்பட்டு, அதற்குள் மொழிபெயர்ப்பு முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கலுக்கான அனுமதி பெற உத்தரவிடப்பட்டது.
English Summary
ADMK Minister scam case TN Police Chennai HC