அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைவு: ஈரானைச் சுற்றி போர் வளையமா...?
Entry American warships war zone being created around Iran
மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஈரானில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வும் மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் மாதம் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டங்களை அடக்குவதற்காக ஈரான் அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சுமார் 27 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவது சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.இதற்கிடையில், அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் பல போர்க் கப்பல்கள் மேற்கு ஆசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன.
இதனால் அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து, போர் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.இந்த நிலையில், அமெரிக்கா ஈரானை தாக்கும் முயற்சியில் இறங்கினால் அதன் தாக்கம் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் எனவும், அது ஒரு சாதாரண மோதல் அல்ல, பிராந்திய அளவிலான பெரிய போராக மாறும் எனவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கடுமையாக எச்சரித்துள்ளார்.
“ஈரானை தாக்கவோ, துன்புறுத்தவோ முயற்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரான் விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் என நம்புகிறேன்.
பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். ஆனால் அது நடக்காவிட்டால், இந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த தயார்” என்று கூறினார்.
மேலும், “உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த கடற்படை எங்களிடம் உள்ளது. சில நாட்களில் ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில், இது உண்மையிலேயே பிராந்தியப் போராக மாறுமா என்பதை உலகம் பார்க்கும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
Entry American warships war zone being created around Iran