மசூதிக்குள் நுழைய பெண்களுக்குத் தடையில்லை...! - உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் அதிரடி அறிவிப்பு...!
Women not prohibited from entering mosques Muslim Personal Law Board makes bold announcement Supreme Court
பெண்கள் மசூதிகளுக்குள் நுழைவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (AIMPLB) உச்சநீதிமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.முன்னதாக, சபரிமலை வழக்கை மையமாகக் கொண்டு அனைத்து வயது பெண்களும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் உரிமை குறித்து அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனுடன், பல்வேறு மத வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த வழக்குகளும் இணைத்து ஆராயப்பட்டு வருகின்றன.இந்த வழக்கில், முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சம்ஷாத் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டபோது, இஸ்லாம் பெண்களை மசூதிகளில் தொழுகை நடத்தத் தடை செய்யவில்லை என்று உறுதியாக தெரிவித்தார்.
அவர் தனது வாதத்தில், “இஸ்லாத்தின் அனைத்து பிரிவுகளிலும், பெண்கள் குறிப்பிட்ட ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான பிரமாணப் பத்திரத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்.
மசூதிகளில் அவர்களுக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. மேலும், மசூதிகளில் கருவறை என்ற தனி பகுதி இல்லை. இருப்பினும், பெண்கள் வீட்டிலேயே தொழுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.
அப்போது நீதிபதி அமானுல்லா இடையூறு செய்து, “ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் மசூதிக்கு சென்றால், குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? என்பதே இந்த நடைமுறைக்கான ஒரு காரணமாக இருக்கலாம்” என கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சம்ஷாத், “அத்தியாவசிய மத நடைமுறை (ERP) என்ற கோட்பாடு, இஸ்லாமிய சூழலில் நீதிமன்றங்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், “இஸ்லாம் என்பது செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து விரிவான வழிகாட்டுதல்களைக் கொண்ட, ஆழமான மற்றும் கட்டுப்பாடுகள் நிறைந்த மார்க்கமாகும்” என்றும் நீதிபதிகள் அமர்வின் முன் வலியுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Women not prohibited from entering mosques Muslim Personal Law Board makes bold announcement Supreme Court