மார்ச் 1 முதல் UTS ஓய்வு… RailOne ஆப் தான் முன்பதிவு-சாதாரண டிக்கெட்டின் புதிய முகவரி...!
UTS retire from March 1 RailOne app new address booking regular tickets
ரெயில்களில் முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை பெற பயணிகள் அதிகம் பயன்படுத்தி வந்த யூ.டி.எஸ். (UTS) செல்போன் செயலி, வருகிற 1-ந் தேதி முதல் படிப்படியாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக பயணிகளின் ‘க்விக் டிக்கெட்’ தீர்வாக இருந்த இந்த செயலி தற்போது ஓய்வு பெறுகிறது.

ஒரு காலத்தில் ரெயில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. பின்னர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள், அதன்பின் யூ.டி.எஸ். மொபைல் செயலி என தொழில்நுட்ப வளர்ச்சி பயணிகளின் அனுபவத்தை எளிமையாக்கியது.
அதோடு, ரெயில் நிலவரம் அறிய என்.டி.இ.எஸ்., புகார் அளிக்க ‘ரெயில் மதாத்’, உணவு ஆர்டர் செய்ய ஆன்லைன் வசதி போன்ற சேவைகளும் அறிமுகமானது.இப்போது இந்த அனைத்து வசதிகளையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ‘ரெயில் ஒன்’ (Rail One) என்ற புதிய சூப்பர் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், சலுகை டிக்கெட், புகார் பதிவு, உணவு ஆர்டர், ரெயில் தகவல் என அனைத்தும் ஒரே செயலியில் கிடைக்கும்.
இதன் காரணமாக யூ.டி.எஸ். செயலி படிப்படியாக நிறுத்தப்படுகிறது. முதலில் சீசன் டிக்கெட் பதிவு மற்றும் புதுப்பித்தல், பின்னர் பிளாட்பாரம் டிக்கெட், ஆர்-வாலட் ரீசார்ஜ் உள்ளிட்ட சேவைகள் முடக்கப்படும்.
இருப்பினும், பயணிகளின் ஆர்-வாலட் தொகை ‘ரெயில் ஒன்’ செயலிக்கு மாற்றப்பட்டு அப்படியே பயன்படுத்த முடியும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.‘ஒவ்வொரு சேவைக்கும் ஒரு ஆப்’ என்ற காலம் முடிந்து, ‘அனைத்தும் ஒரே ஆப்பில்’ என்ற புதிய டிஜிட்டல் யுகத்திற்கு ரெயில்வே பயணிகள் காலடி எடுத்து வைக்க உள்ளனர்.
எனவே அனைவரும் உடனே ‘ரெயில் ஒன்’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
English Summary
UTS retire from March 1 RailOne app new address booking regular tickets