'காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் நடந்த விபரீதம்'...! - அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட புதுமண தம்பதி...!
tragedy that happened just month after their love marriage newlywed couple committed suicide one after other
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் கொண்டபாக்க கிராமத்தை சேர்ந்த அஞ்சலியும், கோமூர் பள்ளி கிராமத்தை சேர்ந்த வினயும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். தையல் தொழிலில் ஈடுபட்டிருந்த 21 வயதான அஞ்சலியும், கூலித்தொழிலாளியான 23 வயது வினயும் இரு குடும்பங்களின் சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

காதலால் தொடங்கிய இவர்களின் வாழ்க்கை, ஒரு மாதத்திற்குள் சோகத்தின் உச்சிக்குச் சென்ற சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது.திருமண வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே, அஞ்சலி செல்போனில் நீண்ட நேரம் பேசுவதாக வினய்க்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் வெடித்தன. கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த வினய், அஞ்சலியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.
அதன்பிறகும் மனைவியுடன் சமரசம் செய்ய வினய் பலமுறை செல்போன் மூலம் தொடர்புகொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அஞ்சலி கடும் மனவருத்தத்துடன் பேச மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் வினய் அழைத்தபோதும் அஞ்சலி அழைப்பை ஏற்கவில்லை.
இதற்கிடையில் ஆழ்ந்த மனஉளைச்சலில் தவித்த அஞ்சலி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறியாமல் ஐதராபாத்தில் வேலை முடித்து சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த வினய்க்கு, வழியிலேயே மனைவி உயிரிழந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
ராயபுரம் கிராமம் அருகே வந்தபோது இந்த தகவலை கேட்ட அவர் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். உடனே தனது தந்தையிடம் செல்போனில் பேசிக் கொண்டு துயரத்தை வெளிப்படுத்திய அவர், பின்னர் தாம் இருந்த இடத்தின் தகவலை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரட்டை உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
tragedy that happened just month after their love marriage newlywed couple committed suicide one after other