விஐபி தரிசனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி; ''உரிமை உண்டு என்று அனைத்து அடிப்படை உரிமைகளும் கருவறைக்குள் கோரப்படும்,"; தலைமை நீதிபதி கருத்து..!
The Chief Justice of the Supreme Court commented after dismissing the petition against VIP darshan
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி ஸ்ரீ மகா காலேஸ்வரர் கோயிலில் நடைமுறையில் உள்ள விஐபி தரிசனத்திற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கு விசாரணையின் போது பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது.அதாவது, ."மகா காலேஸ்வரர் முன்னிலையில் அனைவரும் சமம்; எவரும் விஐபி கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ''கோயிலுக்குள் யார் எப்போது நுழைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வாயிற்காவலராக நீதிமன்றம் செயல்பட முடியாது'' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
கோயில் சன்னதிக்குள் நுழைவது மற்றும் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்துவது என்பது கோயில் நிர்வாகம் மற்றும் மாநில அதிகாரிகளின் நிர்வாக ரீதியான முடிவே தவிர, அது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தொடர்ந்து மதம் சார்ந்த சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விசாரணையின் போது பேசிய தலைமை நீதிபதி கூறியுள்ளதாவது:
கோயில் நிர்வாகத்தில் நீதித்துறை தலையீட்டிற்கு வரம்புகள் உள்ளதாகவும், இதுபோன்ற பிரச்சினைகளை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விஐபி நுழைவு அனுமதிக்கப்பட வேண்டுமா..? இல்லையா..? என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. நாங்கள் நீதித்துறை சார்ந்த பிரச்சினையில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், ''சட்டப்பிரிவு 14 (சமத்துவ உரிமை) கருவறைக்குள் பொருந்தும் என்று நாம் கருதினால், மக்கள் சட்டப்பிரிவு 19 (பேச்சுரிமை) போன்ற பிற உரிமைகளையும் கோருவார்கள். முதலில், வேறொருவர் உள்ளே செல்வதால் எனக்கும் உள்ளே செல்ல உரிமை உண்டு என்பீர்கள்; பிறகு, எனக்குப் பேச்சுரிமை இருப்பதால் இங்கேயே அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க எனக்கு உரிமை உண்டு என்பீர்கள். அதன் பிறகு அனைத்து அடிப்படை உரிமைகளும் கருவறைக்குள் கோரப்படும்," என்று தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோயிலின் கருவறைக்குள் விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து தர்பன் அவஸ்தி என்பவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாநில உயர் நீதிமன்றம், "VIP" என்பது எந்தச் சட்டத்திலோ அல்லது விதியிலோ வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கோயில் நிர்வாகக் குழு மற்றும் ஆட்சியர் செயல்படுத்தும் நிர்வாக விருப்புரிமை சார்ந்த விஷயம் என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்துள்ளதோடு, மனுதாரர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
English Summary
The Chief Justice of the Supreme Court commented after dismissing the petition against VIP darshan