ஈரான் பதில் தாக்குதலில் எதிரொலி; மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தம்..!
Suspension of flights to Middle Eastern countries
அணுசக்தி போட்டியின் காரணமாக இன்று காலை முதல், இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டாக இணைந்து, ஈரான் மீது ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
அதன்படி, தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர். 60 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பலத்த போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இப்பகுதிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியாவின் சில பகுதிகள், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைக்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக இப்பகுதிக்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், விமான நிறுவனங்கள் தேவையான இடங்களில் விமானங்களைத் திருப்பி விடவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், பயணிகள் அறிக்கையை சரிபார்த்து விமான நிலையத்தை அடைய வேண்டும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Suspension of flights to Middle Eastern countries