திடீரென உயிரிழந்த ரூ.21 கோடி மதிப்பு உடைய “அன்மோல்” எருமை!
Rajasthan popular Pushkar buffalo ₹21 crore died suddenly
ராஜஸ்தானின் புஷ்கர் கண்காட்சியில் ரூ.21 கோடி மதிப்பிலான புகழ்பெற்ற எருமை திடீரென உயிரிழந்தது என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எருமை “அன்மோல்” என அழைக்கப்பட்டது. 1,500 கிலோ எடையுடைய இது, கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக இருந்தது. இதை தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் காண வந்தனர். மிகுந்த பாதுகாப்பு, சிறப்பு உணவு, நாட்டு நெய், பால் மற்றும் உலர் பழங்கள் என அரச மரியாதையுடன் வளர்க்கப்பட்டதாக அதன் உரிமையாளர் பாலிமிந்திரா கில் முன்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அன்மோல் திடீரென சுகவீனமடைந்தது. தகவல் அறிந்த உடனே கால்நடை மருத்துவர்கள் குழு புஷ்கர் மைதானத்துக்கு விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால், எருமையின் பெரும் உடல் எடையாலும், உடல் நிலை விரைவில் மோசமடைந்ததாலும், அதை காப்பாற்ற முடியவில்லை என்று கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இதை இயல்பான மரணம் எனக் கூறினாலும், சிலர் இதை காப்பீட்டு மோசடிக்காக திட்டமிட்ட கொலை என சந்தேகிக்கின்றனர். அதிகாரிகள் இந்த கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புஷ்கர் கண்காட்சி இந்தியாவின் பிரபலமான கால்நடை சந்தைகளில் ஒன்றாகும். அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 4,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகங்கள் அடங்கும்.
அன்மோல் எனும் எருமை கண்காட்சியின் நட்சத்திரமாக இருந்து வந்தது. அதன் திடீர் மரணம், பார்வையாளர்களையும், விலங்கினை நேசிப்பவர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Rajasthan popular Pushkar buffalo ₹21 crore died suddenly