நாட்டின் அடுத்த ராணுவ தலைமை தளபதியாக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ராஜா சுப்ரமணி நியமனம்..!
Raja Subramani a native of Tamil Nadu appointed as Army Chief
தற்போது பாதுகாப்பு படை தலைமை தளபதியாக பணியில் உள்ள ஜெனரல் அனில் சவுகான், வரும் 30-ஆம் தேதியுடன் தனது பணிக்காலத்தை நிறைவு செய்யவுள்ளார். இதனைத்தொடர்ந்து நாட்டின் புதிய பாதுகாப்பு படை தலைமை தளபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட என்.எஸ்.ராஜா சுப்ரமணி மற்றும் கடற்படை தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய பிராந்திய கமாண்டிங்-இன்-சீப் அதிகாரியாக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி, பின்னர் 2024-ஆம் ஆண்டு ஜூலை 01ந் தேதி முதல் 2025-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை ராணுவத்தின் துணை தளபதியாக பதவி வகித்து வந்தார்.
தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 01ந் தேதி முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணியை அடுத்த பாதுகாப்பு படை தலைமை தளபதியாக (சி.டி.எஸ்.) நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து அடுத்த உத்தரவு வரும் வரை ராணுவ விவகாரங்கள் துறையின் மத்திய அரசின் செயலாளராகவும் செயல்படுவார். பி.வி.எஸ்.எம்., ஏ.வி.எஸ்.எம்., எஸ்.எம்., வி.எஸ்.எம். ஆகிய உயரிய விருதுகளை பெற்றுள்ள இவர், நாட்டின் ராணுவ வியூகம் மற்றும் நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1968-ஆம் ஆண்டு ஜூலை 21ம் தேதி மும்பையில் பிறந்த இவர், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதோடு சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் ஆய்வியல் முனைவர் பட்டம் பெற்றவர். இவரது மனைவி சுனிதா திவேதி சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர்.

இந்திய கடற்படையின் அடுத்த தளபதியாக கர்நாடகாவை சேர்ந்த வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மும்பையில் உள்ள மேற்கு கடற்படை கமாண்டராக இருக்கும் இவர், வரும் 31-ஆம் தேதி புதிய கடற்படை தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
இவரது பணிக்காலம் வரும் 2028-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை இருக்கும். இவர் 1987-ஆம் ஆண்டு ஜூலை 01ந் தேதி கடற்படையில் இணைந்தவர். தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் முறையில் நிபுணத்துவம் பெற்ற இவர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் பிரிட்டன், அமெரிக்காவின் கடற்படை போர் கல்லூரிகளில் பயின்றவர் ஆவார்.
English Summary
Raja Subramani a native of Tamil Nadu appointed as Army Chief