RAC டிக்கெட்டா...? கவலையே படாதீங்க...! ஏசி பெட்டிகளில் இனி போர்வை, கம்பளி கட்டாயம்...! - ரெயில்வே வாரியம் அதிரடி உத்தரவு...!
RAC ticket Dont worry Blankets and rugs now mandatory AC coaches Railway Board orders action
விரைவு ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளில் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கும் இனி போர்வை, கம்பளி, தலையணை உள்ளிட்ட படுக்கை வசதிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று ரயில்வே வாரியம் மீண்டும் வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளது.இதுவரை, உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே போர்வை, கம்பளி மற்றும் தலையணை வழங்கப்பட்டு வந்தது.

அதேசமயம், குளிர்சாதன பெட்டிகளில் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்படும் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கு இந்த அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டதால், இரவு நேரப் பயணங்களில் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.ஆர்.ஏ.சி. பயணிகளுக்கும் படுக்கை உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், பல ரயில்களில் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை என பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, அனைத்து விரைவு ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளிலும் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகளுக்கு போர்வை, கம்பளி மற்றும் தலையணை உள்ளிட்ட அனைத்து படுக்கை வசதிகளும் தவறாமல் வழங்கப்படுவதை ஒவ்வொரு மண்டல ரயில்வே நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் புதிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்கத்தின் முன்னாள் நிர்வாகி மனோகரன் விளக்கமளிக்கையில், போர்வை, கம்பளி மற்றும் தலையணைகள் போதுமான அளவில் இல்லாததே இந்தப் பிரச்சினைக்கான முக்கிய காரணமாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆர்.ஏ.சி. பயணிகளுக்கு அவற்றை வழங்கத் தயங்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முழு கட்டணத்தைச் செலுத்தியும் உறுதிப்படுத்தப்பட்ட படுக்கை வசதி கிடைக்காமல் அமர்ந்தபடியே நீண்ட தூரம் பயணிக்கும் ஆர்.ஏ.சி. பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள இந்த புதிய உத்தரவு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என்றும் மனோகரன் தெரிவித்தார்.
English Summary
RAC ticket Dont worry Blankets and rugs now mandatory AC coaches Railway Board orders action