தேர்தலில் படுதோல்வியின் எதிரொலி; டெல்லியில் பிரியங்கா-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு..?
Priyanka and Prashant Kishor meet in Delhi
கடந்த தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது. இவ்வாறு தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள காங்கிரஸ் எம்பி பிரியங்கா, தேர்தல் வியூக நிபுணரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த அக்கட்சி, கடைசியாக பீஹார் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. அத்துடன், இத்தேர்தலில் ராகுல்காந்தி எழுப்பிய ஓட்டுத் திருட்டு, எஸ்ஐஆர் விவகாரம் உள்ளிட்டவை அங்கு எதிர்வினையாற்றவில்லை.
இந்த சூழலில் பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் பீஹாரில் ஜன் சுராஜ் கட்சி என தனிக்கட்சியை பெரும் நம்பிக்கையுடன் தொடங்கினார். அவர் தேர்தலை முன்னிட்டு செய்த நடைபயணம், பிரசாரம், தேர்தல் வியூகம் என எந்த திட்டமும் இந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை. அதன் விளைவாக அவரது கட்சியும் டெப்பாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், 03 ஆண்டுகளுக்கு பிறகு, டில்லியில் உள்ள சோனியாவின் இல்லத்தில் பிரியங்காவும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியதாககூறப்படுகிறது.ஆனால், இரு தரப்பும் இது குறித்து உறுதிபடுத்தவில்லை. இது குறித்து பிரியங்கா கூறும்போது, 'நான் யாரை சந்திக்க விரும்புகிறேன் அல்லது சந்திக்கவிரும்பவில்லை என்பதை தெரிந்து கொள்ள யாருக்கும் ஆர்வம் இல்லை; என குறிப்பிட்டுள்ளார்.
பிரசாந்த் கிசோர், ப்ரியங்கா ஆகிய இருவரும் சந்திப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 2022-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காங்கிரசில் அவர் சேர்வதாக பேச்சு அடிப்பட்டது.

அப்போது காங்கிரசை சீரமைப்பது குறித்து சோனியாவிடம் அறிக்கை ஒன்றை பிரசாந்த் கிஷோர் சமர்ப்பித்து இருந்தார். இது குறித்து ஆராயவும், கட்சி சந்திக்கும் சவாலை சரி செய்வது குறித்தும் குழு ஒன்றை அமைப்பதாக சோனியா தெரிவித்தார். இந்த குழுவில் இடம்பெற பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டபோது, இதற்கு அனுமதி கிடைக்காத காரணத்தினால், பேச்சுவார்த்தை நின்று போனது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேரும் எண்ணத்தை பிரசாந்த் கிஷோர் கைவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள பிரசாந்த் கிஷோர், அடுத்த தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், டில்லியில் பிரியங்காவை சந்தித்து பேசியதாக வெளியாகியுள்ள தகவல்கள் இரு கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Priyanka and Prashant Kishor meet in Delhi