க்யூ வேண்டாம்... கவலை வேண்டாம்...! ‘ரெயில் ஒன்’ செயலியில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு தள்ளுபடி...!
No queues no worries Discounts those who book tickets Rail One app
ரெயில்வே பயணிகளை ஒரே செயலியில் அனைத்து சேவைகளையும் பெறச் செய்யும் நோக்கில், முன்பு தனித்தனியாக செயல்பட்டு வந்த ஐஆர்CTC, UTS, NTES உள்ளிட்ட பல செயலிகளின் வசதிகளை ஒருங்கிணைத்து, ரெயில்வே அமைச்சகம் புதியதாக ‘ரெயில் ஒன்’ (Rail One) என்ற ஒருங்கிணைந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ‘ரெயில் ஒன்’ செயலி மூலம்,முன்பதிவு டிக்கெட்,முன்பதிவில்லா சாதாரண டிக்கெட்,பிளாட்பார டிக்கெட்,ரெயில் வருகை – புறப்படும் நேர விவரங்கள்,சீசன் டிக்கெட் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாக பெற முடியும்.மேலும், ரெயில்வே துறை, ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்தும் பயணிகள் நேரடியாக புகார் பதிவு செய்யலாம்.

முன்பதிவில்லா டிக்கெட்டுக்கு 3% கட்டண சலுகை
‘ரெயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு 3 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் எடுப்பதை தவிர்த்து, செல்போன் மூலம் டிஜிட்டல் டிக்கெட் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன், இந்த சலுகை QR கோடு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ‘ரெயில் ஒன்’ செயலி வழியாக டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் அனைத்து பயணிகளுக்கும் இந்த சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 14 வரை சலுகை
ஆர்-வாலட் (R-Wallet) மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 3% காஷ்பேக் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.
இதனுடன், ‘ரெயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் வரும் ஜூலை 14-ந் தேதி வரை 3% கட்டண சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வே சாதனை
தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை செல்போன் செயலி மூலம் வழங்கி குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது.
இதனால், இதுவரை UTS செயலியை பயன்படுத்தி வந்த பயணிகள், இனி ‘ரெயில் ஒன்’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என ரெயில்வே வலியுறுத்தியுள்ளது.
அபராத பிரச்சினைக்கு தீர்வு
செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும்,பணம் கழிக்கப்பட்டும்,டிக்கெட் முழுமையடையாத நிலை அல்லது தகவல் கிடைக்காத காரணத்தால் அபராதம் செலுத்தும் சூழ்நிலைகள் ஏற்படுவதை தவிர்க்கவும்,‘ரெயில் ஒன்’ செயலி பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான தீர்வாக இருக்கும் என்றும் ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
No queues no worries Discounts those who book tickets Rail One app