32 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மியாவ் மியாவ்' அல்லது 'ஒயிட் மேஜிக்' என்று அழைக்கப்படும் போதைப்பொருள் பறிமுதல்..!
Mephedrone drugs worth 32 crore rupees seized
மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், இரண்டு கார்களில் கடத்திச் செல்லப்பட்ட, 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 'மெபெட்ரோன்' போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
'கோகைன்' போன்ற போதை பொருட்களுடன் ஒப்பிடுகையில், 'மெபெட்ரோன்' மலிவான விலையில் கிடைப்பதாலும், 'ஆன்லைன்' தளங்களில் எளிதாக வாங்க முடிவதாலும் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா, தானே மாவட்டத்தில் ரஞ்சனோலி அருகே 'மெபெட்ரோன்' போதைப்பொருள் டெலிவரி செய்யப்பட இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போலீசார் நாசிக் -தானே நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற பி.எம்.டபிள்யு., உட்பட இரண்டு உயர்ரக கார்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

அப்போது, அன்சாரி என்பவரின் காரில் இருந்து சுமார் 11.7 கிலோவும், தேசாய் என்பவரின் பி.எம்.டபிள்யு., காரில் இருந்து 4.161 கிலோ என, மொத்தம் 15 கிலோவுக்கு மேல் 'மெபெட்ரோன்' போதைப்பொருள் கடத்தி வந்தமை தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசார் அதனை பறிமுதல் செய்துள்ளனர். இதில் பி.எம்.டபிள்யு., காரை திருடி, அதில் தானே மாநகராட்சியின் லோகோவை வைத்து கடத்தலுக்கு பயன்படுத்திய அதிர்ச்சி தகவலும் கண்டுபிடிக்கப்பட்டது.
போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவர் மீதும், ஏற்கனவே தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, அவர்களிடம் போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த 'மெபெட்ரோன்' என்று வேதியியல் பெயர் கொண்ட இந்த போதை பொருள் 'மியாவ் மியாவ்' அல்லது 'ஒயிட் மேஜிக்' என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் இந்த போதைப்பொருளால் மாரடைப்பு, நினைவு இழத்தல், வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Mephedrone drugs worth 32 crore rupees seized