மேற்று வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு குற்றச்சாட்டு; ஸ்ட்ராங் ரூம் பகுதிக்கு விரைந்த மம்தா பானர்ஜி..!
Mamata Banerjee rushes to the strong room area amidst allegations of irregularities in voting machines in West Bengal
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவுகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 04 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி பாஜகவிற்கு சாதகமாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்திற்குள் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டி கொல்கத்தாவில் உள்ள குதிராம் அனுசீலன் கேந்திரா பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ராங் ரூம் வாசலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் குணால் கோஷ் மற்றும் சசி பாஞ்சா ஆகியோர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாலை 03.30 மணிக்கு ஊழியர்களை வெளியேறச் சொல்லிவிட்டு, பின் 04 மணிக்கு அறை மீண்டும் திறக்கப்படும் என மின்னஞ்சல் அனுப்பியதில் முறைகேடு நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தனது சொந்தத் தொகுதியான பவானிபூரில் உள்ள ஷகாவத் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு மம்தா பானர்ஜி நேரில் சென்று கண்காணித்துள்ளார்.
இதற்கு முன்னதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட அவர், "வாக்கு எண்ணும் மையங்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும். இயந்திரங்களை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது, இதை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். பவானிப்பூரில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களம் இறங்கியுள்ளார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"பாதுகாப்பு அறையினுள் சிசிடிவி காட்சிகளின்படி அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது; இது பட்டப்பகலில் நடக்கும் ஜனநாயகப் படுகொலை" என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தபால் வாக்குகள் கையாளுதலிலும் முறைகேடுகள் நடப்பதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Mamata Banerjee rushes to the strong room area amidst allegations of irregularities in voting machines in West Bengal