மகாராஷ்டிராவில் அம்பேத்கருக்கு 75 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிலை!
makarastra 75 feet Ambedkar statue
மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர் நகரில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவாக 75 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சிலை அமைக்கும் திட்டத்துக்கு மாநில அரசு ரூ.10 கோடி நிதியுடன் நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
லத்தூர் நகரில் அமைந்துள்ள அம்பேத்கர் பூங்கா, சமூக நீதிக்கும் சமத்துவத்திற்குமான அவரின் பங்களிப்பை நினைவுகூரும் முக்கிய மையமாக திகழ்கிறது. அந்த பூங்காவில் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த 75 அடி உயர சிலை, மாநிலத்தின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக உருவாகவிருக்கிறது.
இத்திட்டம் முன்பு பலமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், நிர்வாக அனுமதி இல்லாததால் பணிகள் தொடங்க முடியாமல் தாமதமாகியிருந்தன. தற்போது அரசின் ஒப்புதலுடன், சிலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவாக உருவாகும் இந்த சிற்பம், சமூக ஒற்றுமைக்கும் கல்வி, சமத்துவம் போன்ற அவரது கொள்கைகளுக்கும் சின்னமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யு பவார் இதுகுறித்து தெரிவித்ததில், “அம்பேத்கர் சிலை திட்டத்துக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெருமைக்குரிய தருணம். மீதமுள்ள பணிகளை நிறைவு செய்ய மேலும் ரூ.12 கோடி தேவைப்படுகிறது. அதற்கான நிதி ஒதுக்கீட்டை விரைவில் பெற அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவேன்” என்று கூறினார்.
English Summary
makarastra 75 feet Ambedkar statue