பதவி உயர்வு ஆசை...! கிளி ஜோசியரிடம் ரூ.20 லட்சத்தைப் பறிகொடுத்த வருமான வரித்துறை அதிகாரி...! - நடந்தது என்ன...?
Lured by Promise Promotion Income Tax Officer Loses 20 Lakhs Parrot Astrologer What Exactly Happened
பெங்களூரு பாரதி நகரைச் சேர்ந்த 55 வயது வருமான வரித்துறை அதிகாரி ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கிளி ஜோசியரிடம் சுமார் 20 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை பறிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ரமேஷிற்கு அறிமுகமான சேகர் (59) என்ற கிளி ஜோசியர், அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கச் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என நம்ப வைத்துள்ளார்.

செல்வம் குவிய வேண்டுமானால் வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை வைத்துப் பூஜை செய்ய வேண்டும் என்று ஜோசியர் கூறியதை நம்பி, ரமேஷ் ரூ.20.55 லட்சம் ரொக்கம், 193 கிராம் தங்கம் மற்றும் 1.3 கிலோ வெள்ளியை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆனால், பூஜைக்குப் பிறகு பொருட்களைத் தருவதாகக் கூறிவிட்டு ஜோசியர் தலைமறைவானார். இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் பாரதி நகர் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விசாரணையில், தமிழகத்தைச் சேர்ந்த அந்த ஜோசியர் தினமும் ரயிலில் பெங்களூரு வந்து கிளி ஜோசியம் பார்த்துச் சென்றது தெரியவந்தது.
அவரைப் பிடிக்கத் திட்டம் தீட்டிய காவலர்கள், ஜோசியம் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்து ஆசை வார்த்தை காட்டி அவரைப் பெங்களூரு வரவழைத்துக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து முதற்கட்டமாக ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 147 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
English Summary
Lured by Promise Promotion Income Tax Officer Loses 20 Lakhs Parrot Astrologer What Exactly Happened