பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சொகுசாக வாழும் கொடூர குற்றவாளிகள்!
ISIS VIP Treatment Bengaluru Parappana Agrahara Jail
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் விஐபி உபசரிப்புகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. உயர் பாதுகாப்பு சிறையாகக் கருதப்படும் இச்சிறையில், பயங்கரவாத மற்றும் கொலை வழக்குகளில் கைதானவர்கள் கூட சலுகை வாழ்க்கை அனுபவிப்பதாக புதிய விடியோவொன்று வெளிவந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக ஆள்சேர்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜுஹாத் ஹமீத் சகீல் மன்னா மற்றும் பல பாலியல் வன்கொடுமைகள், கொலை வழக்குகளில் குற்றவாளியான உமேஷ் ரெட்டி ஆகியோர் இச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளியாகியுள்ள விடியோவில், உமேஷ் ரெட்டி தனது அறையில் தொலைக்காட்சியுடன் சுகமாக இருப்பது மற்றும் ஹமீத் மொபைல் போனில் வெளிப்புற நபருடன் உரையாடுவது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறை விதிகளை மீறி கைதிகள் இத்தகைய வசதிகளை பயன்படுத்தியுள்ளதை கண்டித்து பல தரப்பினர் விமர்சனம்கூறினர். இதையடுத்து, சிறை நிர்வாகம் உள்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது முதல்முறை அல்ல. கடந்த அக்டோபரில், ரௌடி ஸ்ரீனிவாஸ் சிறையிலேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. அதேபோல், நடிகர் தர்ஷன் ரேணுகா சாமி கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது காபி அருந்தி சிகரெட் பிடித்தபடி விஐபி உபசரிப்பில் இருப்பது போன்ற காட்சிகளும் வெளிவந்திருந்தன.
சிறை நிர்வாகம் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமலில் இருப்பதாகக் கூறினாலும், இத்தகைய சம்பவங்கள் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளன.
English Summary
ISIS VIP Treatment Bengaluru Parappana Agrahara Jail