நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்..!
India Alliance MPs pay tribute at Gandhi Samadhi to students who committed suicide due to NEET exam question paper leak
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான சிஜேபி இயக்கத்தினரின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி எம்.பிக்கள் காந்தி சமாதியில் இன்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, ''நாங்கள் இந்திய மாணவர்களுடன் நிற்பதை யாராலும் தடுக்க முடியாது'' என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
காந்தி சமாதிக்கு இன்று பேருந்தில் புறப்பட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டனர். காந்தி சமாதியை சென்றடைந்த ராகுல் காந்தி, காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் இண்டியா கூட்டணி எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், ஜந்தர் மந்தரில் போராட்டங்களின் போது காயமடைந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் டெல்லியின் மையப்பகுதியில் உள்ள காந்தி சமாதிக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் இல்லத்திலிருந்து பேருந்து மூலம் புறப்பட்ட அவர்களை, தடுப்புகள் மற்றும் காவல் வாகனங்கள் மூலம் காவல் துறை சிறிது நேரம் தடுத்து நிறுத்தியது. ஆனால், பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது;

எங்கள் மாணவர்கள் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அதனால் நாங்களும் வீதிக்கு வந்துள்ளோம் என்றும், நாங்கள் காந்தி சமாதிக்குச் செல்ல முயல்கிறோம், ஆனால் தடுக்கப்பட்டுள்ளோம். மாணவர்களுக்காக நாங்கள் எப்போதும் நிற்கிறோம்'' என்று தெரிவித்தார்.
அதன்பின்னர், காந்தி சமாதிக்கு வந்தடைந்த ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறும்போது;
மகாத்மா காந்தி இங்கே படுகொலை செய்யப்பட்டார். இன்று, மோடி அரசு இந்தியாவில் ஜனநாயகத்தைக் கொலை செய்கிறது என்று விமர்சித்ததோடு, மாணவர்களைக் கொடூரமாகத் தாக்குகிறது, அடித்துத் துன்புறுத்துகிறது. இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாங்கள் மாணவர்களுடன் இருக்கிறோம். நரேந்திர மோடி கல்வி அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், நாங்கள் இந்திய மாணவர்களுடன் நிற்பதை யாராலும் தடுக்க முடியாது என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், டெல்லியில் சிஜேபியின் போராட்டம் தொடர்ந்ததால், ஜந்தர் மந்தரின் 1.5 கி.மீ. சுற்றளவில் மாலை 04 மணி முதல் நள்ளிரவு வரை மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
India Alliance MPs pay tribute at Gandhi Samadhi to students who committed suicide due to NEET exam question paper leak