பண ஆசை... 4 வயது மகனை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தந்தை...! சிக்கிய 3 பெண்கள்...!
Father sold his 4 year old son for Rs 3 lakhs for money in Andhra
ஆந்திர பிரதேச மாநிலத்தில் பண ஆசையால் நான்கு வயது மகனை தந்தை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் ஷேக் மசூத். இவர் காய்கறி, பழங்களை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கவுசர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள், ஷேக் மசூத்திடம் குழந்தை விற்பனை செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
மேலும் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஆண் குழந்தை தேவைப்படுகிறது என்றும், அவர்கள் ரூ.3 லட்சம் வரை பணம் கொடுப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் குடும்ப வறுமையால், பணத்திற்கு ஆசைப்பட்ட ஷேக் மசூத் இரண்டாவது மகனான 4 வயது அயனை விற்பனை செய்ய முடிவு செய்து, முன்பணமாக 1.5 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஷேக் மசூத் மகனை ஹைதராபாத் அழைத்துச் சென்று மீதமுள்ள ரூபாய் ஒன்றரை லட்சத்தை பணத்தை வாங்கிக் கொண்டு தம்பதியிடம் குழந்தையை விற்பனை செய்துவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் குழந்தையைக் காணவில்லை என்று மனைவியிடம் ஷேக் மசூத் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பணத்திற்கு ஆசைப்பட்டு சிறுவனை தந்தை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஹைதராபாத் சென்று சிறுவனை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுவன் விற்பனைக்கு உடந்தையாக இருந்த மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
English Summary
Father sold his 4 year old son for Rs 3 lakhs for money in Andhra