வழக்குகளுக்கு இனி வேகமான தீர்ப்பு...? உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்வு...! - குடியரசு தலைவர் அதிரடி ஒப்புதல்!
Faster verdicts cases now Number Supreme Court judges increased 37 President approval
இந்திய உச்சநீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியை சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், வழக்குகளின் அதிகரித்துவரும் குவிவையும், நீதித்துறையின் பணிச்சுமையையும் கருத்தில் கொண்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்காக, தலைமை நீதிபதியை தவிர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ல் இருந்து 37 ஆக உயர்த்தும் தீர்மானம் கடந்த மே 5-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நிலுவையில் நீண்டகாலமாக தேங்கி கிடக்கும் வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணவும், நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், 1956-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சட்டத்தில் திருத்தம் செய்யும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான திருத்த அவசரச் சட்டம் முன்மொழியப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்தும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த தகவலை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத காலகட்டங்களில் அவசரச் சட்டங்களை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 123-வது பிரிவின் கீழ் இந்த அவசரச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டு தலைமை நீதிபதியை தவிர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 30-ல் இருந்து 33 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அந்த எண்ணிக்கை 38 ஆக உயர்த்தப்பட்டிருப்பது நீதித்துறையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நீதிபதி பணியிடங்களுக்கான நியமனங்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் விரைவில் மேற்கொள்ள உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Faster verdicts cases now Number Supreme Court judges increased 37 President approval