5 வயது மகளை கொன்று தந்தை தற்கொலை - குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!
Debt Crisis Turns Tragic in Gujarat Father Kills 5-Year-Old Daughter Before Dying by Suicide
குஜராத்தின் அம்ரேலி மாவட்டம் ராஜுலா பகுதியில் கடன் பிரச்சினையால் 5 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜுலாவைச் சேர்ந்த கிஷோர் தனக் (40), கட்டுமானப் பணிகளில் முதலீடு செய்வதற்காக கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. தொழிலதிபர் நண்பர்களிடம் இருந்து தனக்கு வரவேண்டிய ரூ.7.25 லட்சம் பணம் கிடைக்காததால் கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, அவரது மனைவி மஞ்சுபென் 5 வயது மகள் ஹிமான்ஷியை கிஷோரிடம் விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் கிஷோரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால், அவரது சகோதரர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்றபோது கிஷோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.
அங்கு கிடைத்த மூன்று கடிதங்களில், நிதி நெருக்கடியால் மகளுடன் தற்கொலை செய்வதாக கிஷோர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், தன்னுடைய மரணத்துக்குப் பிறகு மகள் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அவரைக் கொன்றதாகவும் எழுதியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முன், மகளின் பிறந்தநாள் விழா போல அறையை பலூன்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்த அவர், சிறுமிக்கு புதிய வெள்ளை ஆடை அணிவித்து, பின்னர் மூச்சுத்திணறச் செய்து கொன்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜுலா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்கள் இருந்தால் தனியாக எதிர்கொள்ள வேண்டாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050
மாநில உதவி எண்: 104
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக உதவி எண்: 1800-599-0019
English Summary
Debt Crisis Turns Tragic in Gujarat Father Kills 5-Year-Old Daughter Before Dying by Suicide