மும்பை விமான பணிப்பெண் கொலை சம்பவம் - கையும் களவுமாக சிக்கிய துப்புரவுத் தொழிலாளி.!
cleaning employee arrested for Flight attendant murder case in mumbai
மும்பை விமான பணிப்பெண் கொலை சம்பவம் - கையும் களவுமாக சிக்கிய துப்புரவுத் தொழிலாளி.!
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரூபால் ஒக்ரே என்ற இளம்பெண் மும்பையில், அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சகோதரி மற்றும் அவரது ஆண் நண்பருடன் தங்கி ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூபால் ஒக்ரேவின் சகோதரி, ஆண் நண்பருடன் தன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனால், வீட்டில் ரூபால் ஒக்ரே மட்டும் தனியாக இருந்த நிலையில் அவருக்கு அவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் சம்பவம் தொடர்பாக மும்பையில் வசிக்கும் நண்பர் ஒருவரிடம் தகவல் தெரிவித்தார். அதன் படி அவர் உடனடியாக ஒக்ரே வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரூபால் ஒக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், அந்த கட்டிடத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் விக்ரம் அத்வால் என்பவர் ரூபால் ஒக்ரே வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விக்ரம் அத்வாலை கைது செய்து விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதும், இதனால் அவர் ஒக்ரேவை கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
இருப்பினும் போலீசார் இந்தக் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பயிற்சி விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
cleaning employee arrested for Flight attendant murder case in mumbai