சால்வையில் சுற்றி ஓடும் ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட குழந்தை...! இளைஞர்களின் துரித செயலால் காப்பாற்றப்பட்ட உயிர்...!
child thrown from speeding auto wearing shawl Life saved by quick action young people
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரின் நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து பச்சிளம் குழந்தை சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆட்டோவில் சென்றவர்கள், குழந்தையை சால்வை மற்றும் சிறிய மெத்தையில் சுற்றியபடி சாலையோரத்தில் தூக்கி வீசியுள்ளனர்.

குழந்தையை வீசிய சில நொடிகளிலேயே அந்த ஆட்டோ அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.அப்போது சாலையோரத்தில் இருந்து தொடர்ந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வழியாகச் சென்ற வாலிபர்கள் சிலர், அழுகுரல் கேட்ட இடத்துக்குச் சென்று பார்த்தபோது பச்சிளம் குழந்தை தனியாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், சால்வை மற்றும் சிறிய மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதனிடையே, குழந்தையை சாலையில் விட்டுச் சென்றவர்களை கண்டுபிடிக்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, ஆட்டோவில் வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, குழந்தையை தாங்கள் வளர்த்துக் கொள்வதாகக் கூறி பலர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், குழந்தையை தனிப்பட்ட முறையில் யாரிடமும் ஒப்படைக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகுமாறும் அவர்கள் அறிவுறுத்தினர்.
English Summary
child thrown from speeding auto wearing shawl Life saved by quick action young people