திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய போர் விமானம்: விமானத்தை விட்டு நகர மறுத்து, காவல் காத்த இங்கிலாந்து விமானி: காரணம் என்ன..?
British pilot refuses to leave fighter jet after landing in Thiruvananthapuram
எரிபொருள் தீர்ந்து போனதால் பிரிட்டிஷ் போர் விமானம் ஒன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த விமானத்தின் பைலட், விமானத்தின் அருகிலேயே இருந்து கொண்டு 'இங்கேயே தான் இருப்பேன்' என்று விடாப்பிடியாக நாற்காலி போட்டு அமர்ந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மையை கருத்தில் கொண்டும், கடற்கொள்ளையர் நடமாட்டத்தை கண்காணிக்கவும், மேற்கத்திய நாடுகளின் போர்க்கப்பல்கள் அரபிக்கடலில் ரோந்து வருகின்றன. இவ்வாறு கடந்த சனிக்கிழமை பிரிட்டீஷ் போர்க்கப்பலில் இருந்து ரோந்து கிளம்பிய எப் 35 பி போர் விமானத்தில், எரிபொருள் தீர்ந்து போயுள்ளது.

குறித்த போர் விமானம் மீண்டும் கப்பலுக்கு செல்வதற்கு போதுமான எரிபொருள் இல்லை என்பதை உணர்ந்த விமானி, அருகே உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க அனுமதி கேட்டுள்ளார். அதற்கு இந்திய அரசும், அனுமதி அளித்ததை தொடர்ந்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பிரிட்டிஷ் போர் விமானம், உடனடியாக அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அதிலிருந்து கீழே இறங்கிய விமானி மைக் என்பவர் விமானத்தை விட்டு வேறு எங்கும் நகர மறுத்துள்ளார். அவரை விமான நிலையத்துக்கு உள்ளே வரும்படியும், சட்டபூர்வமான சில நடைமுறைகள் உள்ளன என்றும் விமான நிலைய அதிகாரிகள் அழைத்துள்ளனர். ஆனால், அவர் செல்ல மறுத்துள்ளார்.

அத்துடன், தனக்கு ஒரு நாற்காலி மட்டும் போதும் என்று கேட்டுள்ளார். வேறு வழியில்லாத அதிகாரிகள், அவருக்கு ஒரு நாற்காலியை கொடுத்துள்ளனர். அதை வாங்கி கொண்ட பிரிட்டீஷ் விமானி, விமானத்துக்கு அருகில் போட்டு அமர்ந்து விமானத்தை காவல் காத்துள்ளார்.
இது பற்றி மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பல மணி நேரம், விமானம் அருகிலேயே நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த விமானியை, உயர் அதிகாரிகள், அவரை சட்டபூர்வமான நடைமுறைகளை பூர்த்தி செய்யும்படி அறிவுறுத்தினர். அதன் பிறகே அவர், அங்கிருந்து எழுந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குள் சென்றுள்ளார்.

இது தொடர்பில் தெரிய வந்துள்ளதாவது: பிரிட்டனில் இருந்து வந்த இந்த வகை போர் விமானம், குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் இல்லை. அதில் இருக்கும் ஆயுதங்கள், தொழில்நுட்ப ரகசியங்கள் வெளியில் போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த விமானி அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய விமானப்படை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு அதில் கூறியுள்ளதாவது:
'இந்த சம்பவத்தை நாங்கள் முன்னரே அறிந்துள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக பிரிட்டிஷ் போர் விமானத்தை தரையிறங்க அனுமதித்தோம். F -35B போர் விமானம் தரையிறங்கியது ஒரு சாதாரண சம்பவமே.
தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விமானப்படையால் ஒருங்கிணைந்த முறையில் செய்து தரப்பட்டன. போர் விமானத்துக்கு தேவையான எரிபொருள், விமான நிலைய நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.' என்று குறிப்பிட்டுள்ளது.
English Summary
British pilot refuses to leave fighter jet after landing in Thiruvananthapuram