புத்தகம் மட்டும் போதாது...இனி தினமும் பத்திரிகையும் படிக்கணும்...! - கர்நாடக அரசின் அதிரடி 'ரூல்ஸ்'...!
Books alone not enough now we have read newspapers every day Karnataka government drastic rules
இன்றைய டிஜிட்டல் பரபரப்பில், மாணவர்கள் மொபைல் போன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கிப் போகும் நிலை அதிகரித்து வருகிறது. நேரத்தை முழுவதும் திரை முனையில் கழிப்பதன் விளைவாக, அவர்களின் உடல் ஆரோக்கியமும் மனநல சமநிலையும் மெல்ல மெல்ல பாதிக்கப்படுகின்றன.

நீண்ட நேரம் மொபைல் பயன்பாட்டின் தாக்கமாக, கண் பார்வை மங்குதல், ஞாபகத்திறன் சிதைவு, கூடுதலாக கேள்வித் திறனில் குறைபாடு போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுவதோடு, மன வளர்ச்சியும் மந்தமாகிறது. உடலை உறுதிப்படுத்தும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஆர்வம் குறைந்து, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை பின்னடைவை சந்திக்கிறது.
இந்த சவால்களுக்கு மாற்றுத் தீர்வாக, கடந்த ஆண்டு உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் பத்திரிகை வாசிப்பை கட்டாய நடைமுறையாக கொண்டு வந்தனர். மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் வெளிவரும் நாளிதழ்களை அவசியமாக வாசிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியது.
இத்தகைய முயற்சிகள் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்துவதோடு, அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, இந்த முன்மாதிரியை தொடர்ந்து மூன்றாவது மாநிலமாக கர்நாடக அரசும் முன்னோடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, கர்நாடகத்தில் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் கன்னட பத்திரிகை வாசிப்பை கட்டாயமாக்க வேண்டும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.அதை ஏற்ற கல்வித்துறை, அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள், உறைவிடப் பள்ளிகள், விடுதிகள் மற்றும் சிறார் பாதுகாப்பு மையங்கள் என அனைத்து கல்வி அமைப்புகளிலும் இந்த நடைமுறையை கட்டாயப்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசின் இந்த முன்னெடுப்புக்கு கல்வி வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். “பாடப்புத்தகங்களில் காணப்படும் சொற்களைவிட பத்திரிகைகளில் பயன்படும் மொழி பல்வகைமை கொண்டதாக இருக்கும். இதனால் மாணவர்களின் கேள்வித்திறன் மேம்படும்; எழுத்துத் திறனும் விரிவடையும்.
அதோடு, உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறியும் அறிவும் உருவாகும். டிஜிட்டல் சாதனங்களுடன் மட்டுப்படாமல், வெளி உலக அறிவும் அவசியம். அதற்கான சிறந்த வழி பத்திரிகை வாசிப்பே” என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இதேபோன்ற முயற்சிகளை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையும் மேற்கொண்டால், மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க முடியும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
English Summary
Books alone not enough now we have read newspapers every day Karnataka government drastic rules