காதலுக்காகப் பெற்றோர், தங்கையைக் கொன்ற இளம்பெண் புதுச்சேரியில் கைது!
Bengaluru Triple Murder Woman Arrested Over Family Slaughter
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (55), மனைவி முத்துலட்சுமி (48), மற்றும் மகள் சுப்ரியா (20) ஆகியோர், மூத்த மகள் சுவேதாவின் (24) அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 22ஆம் தேதி இரவு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
சுவேதா தனது காதலன் கென்னத்துடன் (26) தனியாக வசித்து வந்ததோடு, பெற்றோரின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரூ. 30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதுதொடர்பான வங்கி நோட்டீஸால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது தகராறு வெடித்தது. ஆத்திரமடைந்த சுவேதாவும் கென்னத்தும் இணைந்து தாய் முத்துலட்சுமி, தங்கை சுப்ரியா மற்றும் தந்தை சோமசுந்தரம் ஆகிய மூவரையும் கத்தியால் குத்திக் படுகொலை செய்தனர்.
கைது மற்றும் விசாரணை
கொலைக்குப் பின் சுவேதா பேருந்திலும், கென்னத் பைக்கிலும் தப்பியோடினர். உடல்களை மீட்ட போலீஸார், குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தனர். சுவேதாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், அவர் புதுச்சேரியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரி ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த சுவேதாவை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைதான சுவேதா, "பெற்றோர் என் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, என் தனிப்பட்ட விருப்பங்களைக் கட்டுப்படுத்தியதால் கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள காதலன் கென்னத் இருசக்கர வாகனம் மூலம் கேரளாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், தனிப்படை போலீஸார் தற்பொழுது கேரளா விரைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Bengaluru Triple Murder Woman Arrested Over Family Slaughter