“தொகுதி மறுவரையறை மசோதா மிகப்பெரிய அரசியல் சதி!” – மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு
Constituency Delimitation Bill is a massive political conspiracy Manickam Tagore levels a severe allegation
மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சித்து வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், இந்த மசோதா இந்தியாவின் இறையாண்மைக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களின் அரசியல் குரலை ஒடுக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இது வெறும் கட்சி அரசியலுக்கான பிரச்சனை அல்ல என்றும், தமிழ்நாட்டின் உரிமை மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தனது எக்ஸ் வலைதளப் பதிவில் மாணிக்கம் தாகூர் மீண்டும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி எதிர்க்கட்சிகளால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை, நாடாளுமன்றத் தொகுதிகளை 50 சதவீதம் அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்து மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இதன் மூலம் தண்டனையும், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பின்தங்கிய வடமாநிலங்களுக்கு பரிசும் வழங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மக்களவைத் தொகுதிகள் 50 சதவீதம் உயர்த்தப்பட்டால், உத்தரப்பிரதேசத்தின் தொகுதிகள் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாட்டின் தொகுதிகள் 39-ல் இருந்து 59 ஆகவும் அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான தொகுதி எண்ணிக்கை இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்றும், இது தென் மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த மசோதா இந்தியாவின் இறையாண்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி” என்று மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தப் பாதுகாப்பை தற்போது தகர்க்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சாதிவாரி கணக்கெடுப்பு நிறைவடைவதற்கு முன்பாக தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுத் தொகுதிகளை முறையாக நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பல ஆண்டுகளாக மக்கள் தொகை கட்டுப்பாடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொண்ட முன்னேற்றங்களின் காரணமாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழ்நாட்டின் நலனுக்கும் கூட்டாட்சி உரிமைகளுக்கும் எதிராக அமையும் எனக் கூறப்படும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
English Summary
Constituency Delimitation Bill is a massive political conspiracy Manickam Tagore levels a severe allegation