நாட்டாமை குடும்பம்னு பச்சை குத்தப்பட்டிருந்தால் என்னை எளிதில் நேரடியாகச் சந்திக்கலாம்! ஆதார் அட்டை மாதிரி இது நம்ம அடையாளம்! சரத்குமார் பேச்சு!
If you have Nattamai Family tattooed on you you can easily meet me in person This is our identity just like an Aadhaar card Sarathkumar words
நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தன்னுடன் இணைந்து பணியாற்றிய ஆதரவாளர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்ட விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், தனது ஆதரவாளர்களையும், அவர்களுக்கிடையேயான ஒற்றுமையையும் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியதோடு, பல்வேறு முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், தனது ஆதரவாளர்களுக்கு தனி அடையாளம் உருவாக வேண்டும் என்ற வகையில் ‘நாட்டாமை குடும்பம்’ என்ற பெயரை பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டார்.
“திடீரென எனக்கு ஒரு பச்சை குத்தும் எண்ணம் தோன்றியது. ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இது நமது குடும்ப அடையாளமாக இருக்கும். என்னைச் சந்திக்க வருபவர்களுக்கு இது ஒரு கிரீன் கார்டு மாதிரி. கையில் இந்தப் பச்சை குத்தப்பட்டிருந்தால் என்னை எளிதில் நேரடியாகச் சந்திக்கலாம். என் மகன் ராகுலும் இந்தப் பெயரை பச்சை குத்திக் கொள்வார்” என்று சரத்குமார் கூறினார்.
மேலும், தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தன்னைப் பற்றிய கொண்டாட்டங்களை மட்டும் செய்வதைவிட, சமூகத்தில் நல்ல மனிதர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
“சரத்குமார் படத்தைப் பார்த்து ஸ்வீட் கொடுக்கிறீர்கள், பட்டாசு வெடிக்கிறீர்கள், பாலாபிஷேகம் செய்கிறீர்கள். ‘சரத்குமார் உங்களுக்கு என்ன செய்தார்?’ என்று கேட்பவர்களிடம், ‘சரத்குமார் நல்ல மனிதர்களை உருவாக்குகிறார்’ என்று சொல்லுங்கள். அதுதான் முக்கியம். சும்மா ‘நாட்டாமை குடும்பம்’ என்று பச்சை குத்திக் கொண்டால் மட்டும் போதாது. அந்தப் பெயர் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவும் வகையில் குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் சரத்குமார் கூறினார்.
“நம் குடும்பத்தில் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால், 50 பேர் கொண்ட குழுவை உருவாக்கி அந்தப் பிரச்சனையைப் பதிவு செய்யுங்கள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட ஒரு நல்ல தொகை உருவாகும். உடலாலும், உள்ளத்தாலும், பொருளாதார ரீதியாகவும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும். நாம் இல்லாவிட்டாலும், நம் குழந்தைகள் நம்மைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்ல வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் அனைவரும் இறுதிவரை உறுதியாக ஒன்றாக இருக்க வேண்டும்” என்றும் சரத்குமார் வலியுறுத்தினார்.
ரசிகர்களை வெறுமனே கொண்டாட்டங்களில் ஈடுபட வைப்பதைவிட, அவர்களுக்குள் ஒற்றுமையையும் சமூக அக்கறையையும் வளர்க்க வேண்டும் என்ற சரத்குமாரின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக ‘நாட்டாமை குடும்பம்’ என்ற அடையாளமும், ஆதரவாளர்களுக்கு நிதி ரீதியாக உதவும் வகையில் அவர் முன்வைத்த யோசனையும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
If you have Nattamai Family tattooed on you you can easily meet me in person This is our identity just like an Aadhaar card Sarathkumar words