'மீண்டும் தேர்தலை நடத்துங்கள்; டெல்லியில் பாஜக 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன்'; அரவிந்த் கெஜ்ரிவால் சவால்..!
Arvind Kejriwal challenges I will quit politics if BJP wins more than 10 seats in Delhi
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டுள்ளார். வெளியில் வந்த அவர், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்தார். அத்துடன், ''இதன்படி தேர்தல் நடந்து, அதில் பாஜக 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன்'' என்று சூளுரைத்துள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து இன்று, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், சிபிஐ-க்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், அரசு தரப்பு அதன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
''பாஜக ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்து விட்டது. பிரதமர் மோடி மற்றும் அமித்-ஷாவின் அதிகார வெறியின் மிகப் பெரிய விளைவை டெல்லியின் மூன்று கோடி மக்களும் சுமந்துள்ளதாகவும், இதனை டெல்லி மக்களிடம் நீங்கள் சென்று கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
அத்துடன், உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். பாஜக 10-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால், நான் அரசியலை விட்டே விலகுவேன் என்று பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
மேலும், டெல்லி மக்கள் உங்களைப் பார்த்து சலித்துப் போயுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியை டெல்லியில் அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற பாஜகவால் தீட்டப்பட்ட, சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் சதிதான் இந்த வழக்கு என்று தெரிவித்துள்ளார். அதிகாரத்துக்காக யாரும் நாட்டையும், அரசியலமைப்பையும் இதுபோல வைத்து விளையாடக் கூடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் எந்த உண்மையும் இல்லை. இது ஆரம்பத்திலிருந்தே ஜோடிக்கப்பட்ட ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஏதேனும் உண்மை இருந்தால், விசாரணை பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் நீடிக்கும். ஏராளமான சாட்சிகள் அழைக்கப்படுவார்கள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும். இது ஓர் அற்பமான வழக்கு, மிகவும் போலியானது, மிகவும் பயனற்றது, மிகவும் தவறானது என்று நீதிமன்றம் கூறியது என்பதை சுட்டிக்காட்டி, இதை நான் இதைச் சொல்லவில்லை. இது நீதிமன்றத்தின் வார்த்தைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த குற்றச்சாட்டு, முழு சதியும் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரால் செய்யப்பட்டது. இன்று அவர்கள் இருவரும் முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, அவர்கள் ஒன்றாக இந்த சதியை செய்தனர் என்று காரசாரமாக பேசியுள்ளார்.
English Summary
Arvind Kejriwal challenges I will quit politics if BJP wins more than 10 seats in Delhi