பாலியல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்தது ஏன்..? மனம் திறந்த நடிகை..!
A popular actress breaks her silence about the court verdict regarding the sexual assault
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது காரை வழிமறித்து ஏறிய கும்பல் ஒன்று அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை செல்போனிலும் படம்பிடித்தது.
கேரளாவை உலுக்கிய இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கியமாக கேரளாவின் பிரபல நடிகர் திலீப் மீது குற்றம் சாட்டப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, 2017 ஜூலையில் திலீப் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை முடிவில், திலீப் உள்ளிட்ட 03 பேர் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில், பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி உள்ளிட்ட 06 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தீர்ப்புஅறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை முதல் முறையாக மனம் திறந்துள்ளார். அதில் விசாரணை நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை இழந்தது ஏன் என்றும் அதற்கான காரணத்தையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
என் அடிப்படை உரிமைகள் இந்த வழக்கில் பாதுகாக்கப்படவில்லை. ஏன் என்றால் வழக்கின் முக்கிய ஆதாரமான மெமரி கார்டானது நீதிமன்ற கஸ்டடியின் போதே 03 முறை சட்ட விரோதமாக கையாளப்பட்டு இருக்கிறது.
02 அரசு தரப்பு வக்கீல்கள் வழக்கில் இருந்து விலகி கொண்டனர். பாரபட்சமாக நீதிமன்றம் நடப்பதாக கருதுவதால் வழக்கில் இருந்து விலகுவதாகவும், இந்த நீதிமன்றத்தில் நீதியை நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் அவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர்.
மெமரி கார்டு கையாளப்பட்டது பற்றி முறையான விசாரணை தேவை என்று நான் பல முறை கோரிக்கை வைத்தேன். நான் மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்த போதும் விசாரணை அறிக்கை எனக்கு தரப்படவே இல்லை.
நியாயமான விசாரணை வேண்டும் என்று நான் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்த அதே நேரத்தில், இவ்வழக்கை அதே நீதிபதி தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர் மனுவை தாக்கல் செய்தார். இது கடுமையான சந்தேகங்களை என்னுள் எழுப்பியது.

எனது கவலைகளையும், வழக்கில் தலையிட கோரி ஜனாதிபதிக்கு கடிதங்கள் கூட எழுதினேன். என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள், ஊடகங்கள் அறிய திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டேன். ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் நாடினேன். இந்த நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று தெளிவாக கூறினேன். வேறு நீதிபதியிடம் வழக்கை மாற்ற வேண்டும் என்ற என் கோரிக்கை, ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டது.
கடைசியில் மனிதனின் தீர்ப்பு எவ்வளவு வலுவான முடிவுகளையும் வடிவமைக்கும் என்பதை இந்த நீதிமன்ற தீர்ப்பு எனக்கு உணர்த்தியது. ஒவ்வொரு நீதிமன்றமும், ஒரே மாதிரியாக செயல்படாது என்பதையும் அறிந்தேன்.
நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட பல்சர் சுனில் எனது தனிப்பட்ட டிரைவர் அல்ல. எனது ஊழியர் அல்ல, எனக்கு தெரிந்தவரும் அல்ல. 2016-இல் நான் பணிபுரிந்த ஒரு படத்திற்கு டிரைவராக நியமிக்கப்பட்டார். எனக்கு சிறிதும் தொடர்பில்லாத நபர். அவரை ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் சந்தித்தேன்.

இந்த குற்றம் நடந்த நாள் வரை மீண்டும் ஒருபோதும் சந்தித்தது இல்லை. தயவு செய்து, பொய்க்கதைகளை பரப்புவதை நிறுத்துங்கள். தன்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. தவறான கருத்துகளாலும், பணம் பெற்றுக் கொண்டு விமர்சிப்பவர்களும் வாங்கிய தொகைக்காக அதை தொடர்ந்து செய்யலாம்.'' என்று
அந்த பதிவில் நடிகை கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும், பிரபல நடிகையுமான மஞ்சு வாரியர் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
''மாண்புமிகு நீதிமன்றத்துக்கு.. நான் நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. குற்றத்தை நேரடியாக செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய குற்றத்தை செய்ய திட்டமிட்டு, வழி செய்தவர், அவர் யாராக இருந்தாலும், இன்னும் வெளியே சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கிறார் என்பது அச்சமூட்டுவதாகவுள்ளது.
இந்த குற்றத்தின் பின் இருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட்டால் தான் நீதி நிலை நாட்டப்படும்.'' என்று நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
English Summary
A popular actress breaks her silence about the court verdict regarding the sexual assault