ஓமம் , நம் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய ஒரு மூலிகை விதையாகும்.
ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட பொருள் ஓமம். முக்கியமாக இந்தியாவில் ரா ஜஸ்தான் பகுதியில் பயிரிடப்படுகிறது.இதனால் வட இந்தியாவில் ஓமமானது பூரி,கச்சோரி, ரசம் போன்ற பல உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தையும், சுவையையும் அளிக்கிறது.
இயற்கை மருத்துவத்தில் பயன்படும் ஓமத்திரவம் எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும்.
எளிமையான பொருட்கள் நம்மை நோயிலிருந்து காத்துவிடும் என்பதை பலரும் அறிவதில்லை. தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தாக ஓமத்தை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
ஓமம் சீரக வகையைச் சார்ந்தது.ஓமத்தில் பாஸ்பரஸ்,லிபோக்ளோபின், தயாமின், நியாசின், கரோட்டின், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன.
வயற்றுக் கோளாறுகளுக்கு பெருமளவு உதவுகிறது.பசியின்மையும்,செரிமானக் கோளாறுகள் ஏற்படும் போது அதை ஓம் திரவத்தை கொண்டு சரி செய்யலாம்.
பயன்பாடுகள்:
ஓமச்செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்.இலைகள் சிறகு போன்ற பிளவு பட்ட நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீளமாக வளர்ந்திருக்கும்.இதன் காய்கள் வாசமுள்ளவை. முற்றிப் பழமாகியபின் உலர்ந்த காய்களே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஓமத்தை வாயில் போட்டால் சற்று க் காரமாக சுறுசுறுவென இருக்கும்.இதன் மணத்திற்கும் சுவைக்கும் இதிலுள்ள 'தைமோல்'என்ற வேதிப் பொருள் காரணமாக உள்ளது.
வகைகள்:
சாதாரண ஓமம்,குரோசாணி ஓமம்,அசம்தா ஓமம் என மூன்று வகையான ஓமம் உள்ளது.ஓமம் சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
உடல் பலம் பெற:
*சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் இருப்பர்.சிலர் பார்க்க பலசாலி போல் இருப்பர்.ஆனால், மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளைத் தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள்.அதற்கு ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.
வயிற்றுப் பொருமல்:
சிறு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, அஜீரணம் உள்ளவர்கள் 100கி ஓமத்தை 1லி.நீர்விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக இருக்கும் போது எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
ஓமம், மிளகு வகைக்கு 35கி எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35கி பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை மாலை என இரு வேளையும் 5கி அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
புகைச்சல், இருமல்:
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும்.இவர்கள் ஓமம், கடுக்காய் தோல்,முக்கடுகு, சித்தரத்தை,அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.
மந்தம்:
பொதுவாக மந்தம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும்.இதனால் உடல் சோர்வுற்று, அஜீரணம் ஏற்படும் இதைப் போக்க ஓமம், சுக்கு,சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதிலிருந்து சிறிது எடுத்து மோரில் கலந்து குடித்தால் மந்தம் சரியாகும்.
பசியைத் தூண்ட:
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம்.ஓமத்தை கஷாயம் வைத்து அருந்துவதன் மூலம் நல்ல பசி எடுக்கும்.உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.
இடிப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து , அதில் 100மி. தேங்காய் எண்ணெய் விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதோடு கற்பூரம் பொடியை கலந்து இளஞ்சூட்டில் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி சரியாகும்.
சளி/மூக்கடைப்பு:
ஓமத்தை ஒரு துணியில் கட்டி நுகர்ந்து வர சளி மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.
வீக்கங்கள் கரைய:
ஓமத்தை தேவையான அளவிற்கு நீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இரண்டையும் நன்றாக கலக்கி வாணலியில் சிறிது நேரம் சூடு செய்து களிம்பு போல் தயாரித்து வீக்கம் உள்ள இடத்தில் இந்த களிம்பைக் கட்டி வர விரைவில் குணமாகும்.
ஆஸ்துமா:
1லி. நீரில் அரை டீஸ்பூன் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க ஆஸ்துமா குணமாகும்.
வயிற்று வலி:
அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி நீங்க,5கி. ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும்.
மூட்டு/பல் வலி:
நாட்டு மருந்துக் கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும்.இதை மூட்டு வலி இருப்பவர்கள் தடவி வந்தால் வலி சரியாகும்.
மேலும், இந்த ஓம எண்ணெயை சிறிது பஞ்சில் தொட்டு பல் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தி வர பல் வலி குணமாகும்.
தொப்பை குறைய:
தினமும் இரவில் படுக்கும் முன் அன்னாசி பழத்துண்டுகள்4, ஓமம் பொடி 2ஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க விட்டு , அன்னாசி வெந்ததும் மூடி வைக்கவும். காலை 5மணிக்கு எழுந்து இதனைக் கரைத்து குடிக்கவும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை குறையும்.