திருவிழா : கரகாட்டம் என்றால் என்ன.? அதன் வகைகள் யாவை.?
What is mean by karakattam
தமிழ்நாட்டின் பழமையான நடன வகைகளில் மிக முக்கியமானது கரகாட்டமாகும். ஒவ்வொரு கிராம திருவிழாக்கள், பொங்கல் பண்டிகை விழாக்களில் இந்த கலை நடனம் இடம் பெற்று வருகிறது.
கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும்.
சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும்.
தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் 'சக்திக்கரகம்" என்றும், தொழில்முறை கரகத்தை 'ஆட்டக்கரகம்" என்றும் சொல்வர்.
கோவில் திருவிழாக்களில் கரகாட்டத்தோடு காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு நடனங்கள் நடைபெறும்.
கரகம் அமைக்கப்படும் முறை:
அலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழே விழாதவாறு ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.
கரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், சொம்பு, நீர்க்குடம் என்ற பல அர்த்தங்கள் உண்டு.
கரகாட்டத்திற்கு 3 கிலோ எடையுள்ள சொம்பினுள் 3 அல்லது 4 கிலோ மண்ணோ, அரிசியோ இட்டு ஒரு ரூபாய் நாணயமும் வைத்து கரகச் சொம்பு தயாரிக்கப்படும்.
சொம்பின் வாய் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டை வைத்திருக்கின்றனர். இதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர்.
குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம் இருக்கும்.
தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது, பித்தளையால் செய்யப்படுவது சொம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும்.
இவ்வாட்டத்திற்கு நையாண்டி மேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பன இசைக்கப்படுகின்றன.
கரகாட்ட வகைகள்:
சக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.
ஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில் ஆடப்படுவது.
இன்றைய நவ நாகரிக உலகத்தில் எத்தனையோ பழக்கவழக்கங்கள் மாறிப்போய் விட்டன, இருந்த போதிலும் தமிழ் கலாச்சாரத்தில் இதுபோன்ற நடனங்களின் வாயிலாக பண்டைய கால வாழ்க்கைமுறை மற்றும் வரலாறு தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
English Summary
What is mean by karakattam