திமுகவில் இணைகிறேனா...! அறிவாலயத்தில் அழைப்பு வந்ததா? அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு அறிக்கை!
ADMK Thangamani DMK Call Fake news
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி விடுத்துள்ள அறிக்கையில், "13.8.2025 (இன்றைய) தங்கள் நாளிதழில் முதல் பக்கத்தில் நான் எங்கள் கட்சியில் அதிருப்தியில் இருப்பதாகவும், அறிவாலயத்தில் அழைப்பு என்றும் செய்தி போட்டிருப்பது பார்த்து மிகவும் வருத்தமடைந்தேன். நான் தினந்தோறும் படிக்கிற பத்திரிக்கையில் முதல் பத்திரிக்கையாக படித்து வருகிற வாசகர்.
உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிற ஆசிரியர் மீதும், பத்திரிக்கையின் மீதும் இன்று வந்துள்ள செய்தி, அதுவும் உங்கள் பத்திரிக்கையில் வந்ததைபார்த்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நான் திங்கட்கிழமை காலை (11.8.2025) தொண்டையில் சிறு அறுவைசிகிச்சை செய்து மருத்துவமனையில் இருக்கும்போது இந்த செய்தி என்னை இன்னும் ரணம் அதிகமாக்கியது.
நான் கடந்த வந்த அரசியல் பயணத்தில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் MGR அவர்கள், எங்கள் குலம் காத்த குடும்ப தெய்வம் அம்மா அவர்கள் மற்றும் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் எனது இதயத்தில் என்றும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்.
எங்கள் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் உறவினர் என்பதையும் தாண்டி எங்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அவர்களிடம் உயிரை விட மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளவன். ஆகையால், மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் முதல்வராக வருவதை இந்த இயக்கத்தின் உயிர் மூச்சாக இருக்கிறேன்.
11.8.2025 காலை 6.00 மணிக்கு அறுவை சிகிச்சை என்ற போதும், ஓய்வு எடுக்காமல் கடந்த 9.8.2025, 10.8.2025 ஆகிய தேதிகளில் திருச்சியில் முகாமிட்டு அண்ணன் எடப்பாடியார் சுற்றுபயணம் வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று கட்சிப்பணியாற்றியவனை பற்றி இப்படி ஒரு செய்தி வந்ததை எண்ணி மிகவும் மனவேதனைப்படுகிறேன்.
எனது இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக இயக்கம் தான் என் உயிர் மூச்சு. மூச்சு நின்றதற்கு பிறகு எனது உடலில் அஇஅதிமுக கொடி போர்த்தி தான் இருக்கும் என்பதையும், இது யாரோ சில அரசியல் எதிரிகளின் தவறான தகவல் தெரிவித்ததை செய்தியாக போட்டுள்ளீர்கள். இதை முழுமையாக மறுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Thangamani DMK Call Fake news