25 பேரின் உயிரை காவுவாங்கிய கோவா இரவு விடுதி தீ விபத்து; வெளிநாட்டுக்கு தப்பியோடிய உரிமையாளர்கள்; இண்டர்போல் உதவியை நாடும் போலீசார்..!
Police seek Interpols help to arrest owners who fled abroad following Goa nightclub fire
கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள பாகா கடற்கரை பகுதியில் 'பிர்ச் பை ரோமியோ' லேன்' என்ற இரவு விடுதி கடந்த ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வார இறுதி என்பதால், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏரளமானோர் நேற்று முன்தினம் குவிந்தனர்.
அப்போது 100க்கும் மேற்பட்டோர் முதல் தளத்தில் நடனமாடிக் கொண்டிருந்த போது அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. குறித்த தீ மளமளவென பரவியதில், பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் உடல் கருகி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன், டில்லியில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ' லேன்' இரவு விடுதியின் உரிமையாளர்களான கவுரவ் மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோரை கைது செய்ய இருந்தனர்.
ஆனால் அவர்கள் இருவரும் வீட்டில் இல்லை என தெரியவந்த நிலையில், இருவருக்கும் எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கும்படி குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். குறித்தநோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அதில் குறிப்பிடப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு விமானம் அல்லது துறைமுகங்கள் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரும், விபத்து நடந்த மறுநாளான நேற்றையதினம் அதிகாலை 05:30 மணிக்கு தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் மூலம் தப்பிச் சென்றதை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கான சேவை பாதிக்கப்படவில்லை. இதன்காரணமாக, அவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடியுள்ளனர். அதாவது, இரவு விடுதி விபத்து குறித்த போலீஸ் விசாரணையில் இருந்து தப்பவே அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக போலீசார் சந்தேகின்றனர்.
இதனையடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய இண்டர்போல் உதவியை நாட சிபிஐ அதிகாரிகளின் உதவியை கோவா போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
English Summary
Police seek Interpols help to arrest owners who fled abroad following Goa nightclub fire