பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு! நவ.3-ல் நீதிமனறத்தில் ஆஜராக உத்தரவு!
famous actor against case November 3 appear court
நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்திருந்த வழக்கில் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெரும்பாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது எர்ணாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் நான்கு யானை தந்தங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அதனை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மோகன்லால் மற்றும் அவருக்கு யானை தந்தங்களை வழங்கிய திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் உள்பட 4 பேர் மீது இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் தனது வீட்டிலிருந்து கைப்பற்றிய யானை தந்தங்களை தன்னிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று மோகன்லால் அப்போதைய கேரளா வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து சட்ட திருத்தம் செய்யப்பட்டு யானை தந்தங்கள் மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் வனத்துறை வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவுலோஸ் என்பவர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மோகன்லால் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு மோகன்லால், யானை தந்தங்கள் வைத்திருப்பதற்கான முறையான அனுமதி என்னிடம் இருக்கிறது என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மோகன்லால் உள்பட 4 பேர் மீதான வழக்கு ரத்து செய்ய மறுத்த பெரும்பாவூர் நீதிமன்றம் அனைவரையும் நவ. 3ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
English Summary
famous actor against case November 3 appear court