மொத்தம் ரூ. 2.37 லட்சம் கோடி! புதிய உச்சம் தொட்ட மாத ஜிஎஸ்டி வருவாய்!
India April GST report
2025 ஏப்ரல் மாதத்தில் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியான அறிக்கையில், 2025-26 நிதியாண்டின் முதலாவது மாதமான ஏப்ரலில் கிடைத்த ரூ.2.37 லட்சம் கோடி வருவாய், கடந்த ஆண்டு அதே மாதத்தில் பதிவான ரூ.2.1 லட்சம் கோடியைவிட 12.6% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2017-ல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு ஒரே மாதத்தில் பெறப்பட்ட அதிகபட்ச வருவாய் ஆகும்.
மேலும், இந்த வருவாயில் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி மட்டுமே ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10.7% உயர்வு. அதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வசூலிக்கப்பட்ட வரி 20.8% அதிகரித்து ரூ.46,913 கோடியாக உள்ளது.
இதனுடன், கடந்த மார்ச் மாத வருவாயான ரூ.1.96 லட்சம் கோடியைவிட ஏப்ரல் வருமானம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.