திருப்பூரில் அதிர்ச்சி: தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட செவிலியர்; தலைமறைவான கணவர் கைது..!
Nurse murdered by throwing a stone at her head absconding husband arrested
திருப்பூர் பல்லடம் சாலை ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் பகுதியில் பாழடைந்த வீட்டில் இளம்பெண் ஒருவர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜான் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது, 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை சிதைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். அத்துடன், அந்த பெண்ணின் உடல் அருகே பெரிய கல் ஒன்றும் கிடந்தது. இதனால் பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், அந்த பெண் பிங்க் நிறத்திலான செவிலியர் சீருடை அணிந்திருந்ததால், அவர் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரையை சேர்ந்த சித்ரா வயது 28 என கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் செவிலியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று மனைவியை அழைத்து செல்வதற்காக கணவன் ராஜேஷ் கண்ணா வந்தபோது தான் சித்ரா கொலை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் கணவர் ராஜேஷ் கண்ணா தலைமறைவானதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து, கொலையாளி பிடிக்க 03 தனிப்படை அமைக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த சித்ராவின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வந்த நிலையில், கொலை சம்பவம் தொடர்புடைய சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் மதுரை அலங்காநல்லூரில் வைத்து ராஜேஷ் கண்ணாவை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
Nurse murdered by throwing a stone at her head absconding husband arrested